Pages

Thursday, December 31, 2020

7 ஆம் வகுப்பு திருக்குறள் பாடப்பகுதி

 அழுக்காறாமை(17)

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

2.விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
  அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

3.அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
  பேணாது அழுக்கறுப் பான்.

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.

5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
   வழுக்காயும் கேடீன் பது.

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

6. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

7. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்
.

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

8. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்
.

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

10. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
      பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை

group 4 புறங்கூறாமை(19)

1. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
     புறங்கூறான் என்றல் இனிது

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.

2. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
     புறனழீஇப் பொய்த்து நகை.

ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய்வதைவிடத் தீமையானதாகும்.

3. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

4. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
   முன்னின்று பின்நோக்காச் சொல்.

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

5. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
    திறன்தெரிந்து கூறப் படும்.

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.

7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்.

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
   என்னைகொல் ஏதிலார் மாட்டு.

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

9. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
     புன்சொல் உரைப்பான் பொறை.

ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.

10.ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
     தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

group 4 அருளுடைமை(25)

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது.

2. நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

4. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை
.

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

5.அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.

அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

6. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.

8.பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது.

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.

10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
      மெலியார்மேல் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது

வாய்மை(30)

1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     தீமை இலாத சொலல்.

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

2. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
     நன்மை பயக்கும் எனின்.

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
     தானஞ்செய் வாரின் தலை.

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

6. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்.

 பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று.

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

8. புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தில் இருளினைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகாவாம். துறவறத் தன்மையால் நிறைந்த சான்றோர்க்கு விளக்காவது பொய்யாமையாகிற விளக்காகும்.

10. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
      வாய்மையின் நல்ல பிற.

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

இறைமாட்சி(39)

1. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

2. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

3. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

4. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
     மானம் உடைய தரசு.

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

5. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
     வகுத்தலும் வல்ல தரசு.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

6. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்.

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

7. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்.

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

9. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
     கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

10. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
      உடையானாம் வேந்தர்க் கொளி.

கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

group 4 கல்வி(40)

1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

3. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
   அனைத்தே புலவர் தொழில்.

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

6. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

7. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

9. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்.

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

10. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
      மாடல்ல மற்றை யவை

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை

தெரிந்து செயல் வகை(47)

1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்.

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

2. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    அரும்பொருள் யாதொன்றும் இல்

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

3. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார்.

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

4. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பாடு அஞ்சு பவர்.

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

5. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு.

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று  
    போற்றினும் பொத்துப் படும்.

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

9. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
      கொள்ளாத கொள்ளாது உலகு.

தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

சுற்றந்தழால்(53)

1. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

2. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.

எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்

3. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்   
    கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,
குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்.

தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
     சுற்றத்தால் சுற்றப் படும்.

வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

6. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத்து இல்.

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

7. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.

தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.

அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

9. தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரணம் இன்றி வரும்.

முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
      இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

மடியின்மை(61)

1. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
     மாசூர மாய்ந்து கெடும்.

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

2. மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து.

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு.

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

7. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்.

முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

8. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
   அடிமை புகுத்தி விடும்.

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

9. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

10. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
      தாஅய தெல்லாம் ஒருங்கு.

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

இடுக்கண் அழியாமை (63)

1. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
   அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

2. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்.

வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

3. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

4. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்.

துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

6. அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

7. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்   
    கையாறாக் கொள்ளாதாம் மேல்.

துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்.

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
      ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

group 4 வினை செயல் வகை(68)

1. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

3. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்.

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

4. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.

ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

5. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்
.

வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

6. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்.

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

7. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளம் கொளல்

செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.

8. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்

நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

10. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
      கொள்வர் பெரியார்ப் பணிந்து.

வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்

group 4 அவை அஞ்சாமை(73)

1. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்    
    தொகையறிந்த தூய்மை யவர்.

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்.

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.

3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத்து அஞ்சா தவர்.

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.

கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்

5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

6. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சு மவன்கற்ற நூல்.

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

9. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்.

நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

10. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
      கற்ற செலச்சொல்லா தார்.

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்

நாடு(74)

1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
     இறையொருங்கு நேர்வது நாடு.

புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு.

பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்   
    கொல்குறும்பும் இல்லத நாடு.

பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.

6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.

பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
   வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து.

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு.

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
      வேந்தமை வில்லாத நாடு.

நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்

அரண்(75)

1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
    போற்று பவர்க்கும் பொருள்.

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்

2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.

 3. உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

    அமைவரண் என்றுரைக்கும் நூல்.

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

4. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.

உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

5. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீரது அரண்.
          

பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

6. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
    நல்லாள் உடையது அரண்.

போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

7. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரியது அரண்.

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

8. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வது அரண்.

முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

9. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

10. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
      இல்லார்கண் இல்லது அரண்.

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது

பெருமை(98)

1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்.

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
   தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

5. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
   பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.

7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின்.

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.

8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
   அணியுமாம் தன்னை வியந்து.

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.            

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
      குற்றமே கூறி விடும்.

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

Book back

  1. வாய்மை எனப்படுவது தீங்கு தராத சொற்களைப் பேசுதல் 
  2. பொறாமை உள்ளவன் செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
  3. ‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பொருள் + செல்வம்
  4. ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது யாது + எனின்
  5. தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது தன்னெஞ்சு
  6. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் தீதுண்டோ
  7. செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் தீமை உண்டாகும் 
  8. தன்குடியை சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம சோம்பல் இருக்கக் கூடாது
  9. ’எழுத்தென்ப’ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது எழுத்து+என்ப   
  10. ‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லை பிரித்து  எழுதக் கிடைப்பது கரைந்து +உண்ணும்
  11. கற்றனைத்து+ஊறும் என்பதனைச் சேர்த்த்ந்ழுதக் கிடைக்கும் சொல் கற்றனைத்தூறும் 
  12. வயல் ஒரு நாட்டின் அரணன்று
  13. மக்கள் அனைவரும் பிறப்பால் ஒத்த இயல்புடையவர்கள்
  14. ’நாடென்ப’ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பத நாடு+என்ப    
  15. கண்+இல்லது என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல் கண்ணில்லது  

2. கீழ்க்காணும் சொற்களை கொண்டு திருக்குறள் அமைக்க





1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள

2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

3. பின்வரும் பத்திக்கு பொருத்தமான் திருக்குறளை தேர்ந்தெடு

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘ அரிசந்திரன் ‘ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிசந்திரன் என்னும் மன்னர் ‘ பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தை கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனை தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவந்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

விடை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

 4. பொருத்துக

1.                கற்கும் முறை- செயல் 4

2.                உயிர்க்குக் கண்கள்- காகம் 5

3.                விழுச்செல்வம்- பிழையில்லாமல் கற்றல் 1

4.                எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும் 2

5.                கரவா கரைந்துண்ணும் – கல்வி 3

5. பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்று வரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.   பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

2.  வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று

3.  கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம் கற்ற

மிக்காருள் மிக்க கொளல்

விடை

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று

6. பாடப்பகுதியிலிருந்து படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக



தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு


 
மண்நீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்





உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு

 


No comments:

Post a Comment