Tuesday, January 5, 2021

8 ஆம் வகுப்பு திருக்குறள் பாடப்பகுதி

 

group 4 நடுவுநிலைமை(12)

1. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

2. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

3. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

4. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

5. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்  
    கோடாமை சான்றோர்க் கணி.

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

6. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
     நடுவொரீஇ அல்ல செயின்.

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

7. கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

8. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்  
    கோடாமை சான்றோர்க் கணி.

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
      பிறவும் தமபோல் செயின்.

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

group 4 கூடா ஒழுக்கம்(28)

1.வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
     தான்அறி குற்றப் படின்.

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
     புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

4. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.

எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.

6. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.

மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

7.புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து.

புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

8.மனத்தது மாசாக மாண்டார் நீராடி
   மறைந்தொழுகு மாந்தர் பலர்.

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

9. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல்.

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
      பழித்தது ஒழித்து விடின்.

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

group 4 கல்லாமை(41)

1. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
     நூலின்றிக் கோட்டி கொளல்.

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

2. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்  
    சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

4. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் 
    கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 
    சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

6. உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு.

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

9. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு.      

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
      கற்றாரோடு ஏனை யவர்.

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

குற்றங்கடிதல்(44)

1. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து.

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

2. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு.

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

3. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்  
    கொள்வர் பழிநாணு வார்.

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் த்ரூஉம் பகை.

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்  
    வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

6. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு
.

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை
ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

7.செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்.

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று.

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.

10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
      ஏதில ஏதிலார் நூல்.

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.

இடனறிதல்(50)

1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
    இடங்கண்ட பின்அல் லது

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
     ஆக்கம் பலவுந் தரும்.

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்

3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
     போற்றார்கண் போற்றிச் செயின்.

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்.

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

6. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து.

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்.

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

8. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

9. சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
    உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

10. காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
      வேலாள் முகத்த களிறு.

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

தெரிந்து வினையாடல்(52)

1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

3. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

5. அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

6. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்.

செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

7. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

8. வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.

ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.

9. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு.

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

10. நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
     கோடாமை கோடா துலகு.

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

group 4 செங்கோன்மை(55)

1. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை.

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

2. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
     கோல்நோக்கி வாழுங் குடி.

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

4. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

5. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

6. வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்.

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்
.

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி
செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.         

8. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.           

9. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

10. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
      களைகட் டதனொடு நேர்.

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

வெருவந்த செய்யாமை(57)

1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

2. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

3. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

4. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

5. அருஞ்செவி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்                                                பேஎய்கண்டு அன்னது உடைத்து

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

6. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
     நீடின்றி ஆங்கே கெடும்.

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

7. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

8. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகும் திரு.

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

9. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்   
    வெருவந்து வெய்து கெடும்.

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
      இல்லை நிலக்குப் பொறை.

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

சொல்வன்மை(65)

1. நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று.

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.

2. ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

3. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்
.

சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

4. திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் 
    பொருளும் அதனினூஉங்கு இல்.

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

5. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.

6. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
     மாட்சியின் மாசற்றார் கோள்.

பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

7. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
     இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
     சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

9. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.

குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

10. இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
      உணர விரித்துரையா தார்.

கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

அவையறிதல்(72)

1. அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

2. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.

சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

3. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.

அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

4. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணம் கொளல்.

அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

5. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு.

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

6. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்

7. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்  
    சொல்தெரிதல் வல்லார் அகத்து.

மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

8. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

9. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்குசலச் சொல்லு வார்.

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

10 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
     அல்லார்முன் கோட்டி கொளல்.

தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

படைச்செருக்கு(78)

1. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்நின்று கல்நின் றவர்
.

போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.

2. கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

3. பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
   ஊராண்மை மற்றதன் எஃகு.

பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்.

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

5. விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
    ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து.

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

8. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினும் சீர்குன்றல் இலர்.

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

9. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
      இரந்துகோள் தக்கது உடைத்து.

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

நட்பு(79)

1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

4. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு.

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

7. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

10. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
      புனையினும் புல்லென்னும் நட்பு.

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

group 4 நட்பு ஆராய்தல்(80)

1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு.

ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

2. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்.

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.       

3. குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.

ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

4. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்   
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

5. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
    வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

6. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.

7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.

9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்.

கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

10. மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
      ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

மானம்(97)

1. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்.

கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

2. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
     சுருக்கத்து வேண்டும் உயர்வு.

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

4. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை.

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்
.

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

6. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
    இகழ்வார்பின் சென்று நிலை.

மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

7. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று.

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

8. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து.

ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

10. இளிவரின் வாழாத மானம் உடையார்
     ஒளிதொழுது ஏத்தும் உலகு.

மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்

group 4 பண்புடைமை(100)

1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு.

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு.

அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
    பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

5. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு.

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

6. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
    மண்புக்கு மாய்வது மன்.

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.

7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர்.

அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.

8. நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை
.

நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன்று இருள்.

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
      கலந்தீமை யாற்றிரிந் தற்று.

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

Book Back

  1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை
  2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்
  3. ’வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வன்மை+உருவம்
  4. நெடுமை+தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் நெடுந்தேர்
  5. ’வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி உவமை அணி
  6. அரசரை அவரது   குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்
  7. சொல்வளமும் நற்பண்பும்  உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேச வேண்டும்
  8. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கண்+ஓடாது
  9. ’கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கசடு+அற
  10. என்று+ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் என்றாய்ந்து
  11.  ஆண்மையின் கூர்மை பகைவருக்கு உதவுதல்
  12. வறுமை வந்த காலத்தில் ஊக்கம்   குறையாமல் வாழ வேண்டும்
  13. ’பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது பெருமை+செல்வம்
  14. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஊர்+ஆண்மை
  15. திரிந்து+அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் திரிந்தற்று

2. பொருத்துக

  1. இன்பம் தருவது- நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்- 5
  2. நட்பு என்பது- குன்றிமணியளவு தவறு- 3
  3. பெருமையை அழிப்பது- செல்வம் மிகுந்த காலம்-  4
  4. பணிவு கொள்ளும் காலம்- சிரித்து மகிழ மட்டுமன்று-  2
  5. பயனின்றி- பண்புடையவர் நட்பு - 1

3.திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்

    விடை

        தக்கார் தகவிலர் என்பது அவரவர்

        எச்சத்தால் காணப் படும்

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது

    விடை

        தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

        இடங்கண்ட பின்அல் லது

 

4. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியிந்தோல் போர்த்து மேய்ந் தற்று


2. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

 

5. சீர்களை முறைப்படுத்தி எழுதுக

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது

வினைபடு பாலால் செவ்விதுஆங்கு

 விடை

        கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

        வினைபடு பாலால் கொளல்

6. படங்களுக்குப் பொருத்தமான திருக்குறகளை எழுதுக


 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று


 

 கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து


கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது

7. பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க

பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர்.தலைமை ஆசிரியர் ‘ செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்கு தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள்  அனைவரும் ‘ சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்

1. அவை அறிந்து ஆரய்ந்து சொல்லிக சொல்லின்

    தொகைஅறிந்த தூய்மை யவர்

2. இதனை  இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து

    அதனை அவன்கண் விடல்

3. ஒர்ந்துகண்  ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

    தேர்ந்துசெய் வஃதே  முறை

 விடை

   இதனை  இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து

   அதனை அவன்கண் விடல்

 

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...